சீரிய நற்பண்பழகா! சிந்தனையைத் தூண்டும் சிறந்த பேச்சழகா!
சின்னஞ்சிறுதீவில் பண்டிதனாய் முதலில் பவனி வந்த பேரழகா!
அம்பிகையின் இணையில்லா அருட்பெருந்திறத்தினாலே
அகவை தொண்ணூற்றைந்தை அடைந்தார் இன்று என்று
உவகை கொண்டு ஊர் மக்கள் வாழ்த்துவோமே!
அன்பென்னும் நல்லியல்பால் அனைவர்க்கும் இனியவனாய்
அறியாமை இருளகற்றி அறிவொளியை ஏற்றியவன்
அதிகாரப்பதவிகள் அடுக்கடுக்காய் வந்தபோதும்
அடிமையாய்க் கல்விக்கு அரும்பணிகள் செய்தமகன்
நல்லைநகரில் ஒரு ஆறுமுகநாவலன் போல்
நயினைநகர் தன்னில் தமிழ்வளர்த்த பெருமகனே!
மதிப்புயர்ந்த தங்கமாம் சொர்ணம்மாவை - இணையில்லா
மனையாள் எனப்பெற்றே மகிழ்ந்து இல்லறம் கண்டு – உலகு
வியக்கின்ற மக்களைப் பாருக்குத் தந்த வித்தகன்
நல்லையா மனையாள் மக்கள் பேரர் பூட்டரோடு மகிழ்ந்திருந்து
இனிவரும் காலங்களும் இன்பமாய் ஆகி நலம் வாழ என்றும்
நயினைத் தளம் வாழ்த்தும் நயினை நங்கை