என்னம்மா போல எனை எண்ண வைக்கும்
எந்தன் சின்னம்மா ! அன்ரி என்றே நானும அன்போடு அழைக்கின்ற என் அன்பம்மா !
அமுதவிழாக்காணும் இந்த அற்புத நாளினிலே
அமுதான தமிழ்மொழி போல ஆண்டாண்டு காலம் அவர் வாழ வேண்டுமென்ற
தமிழ்ப்பூக்கள் தனைத் தொடுத்து தருகின்றேன் மாலையாக்கி
நவரெத்தினங்களை நயினைக்குத் தந்து
நயினை மண்ணில் வலம் வந்த உயர்வணிகன் சு.கு என்று இன்றும் எம்முள் வாழும் குமாரசாமி
எள்ளளவும் தீங்கை எவருக்கும் எண்ணா, மனமுடையாள்
கண்ணாடியாச்சி கடையில் நின்றால் - சும்மா
இனிப்புத்தருவா என்று, நயினை மக்கள் நாவில்
இன்றும் தவழும் இல்லாள்- வள்ளியம்மை
மகளாக மண்ணிலே மலர்ந்தவளே !
நல்லதம்பி நன்மகனை நற்பண்பு கொண்டவனை
உறவுகளை உபசரிக்கும் உத்தம குணத்தவனை
வங்கியை நிர்வகிக்கும் வல்லமை மிகுந்தவனை
கோவில்குளத்தின் குட்டி ஜமீன்தாரை
துணைவன் எனக்கொண்டு
இணையில்லா இல்லறம் என்னும் நல்லறம் கண்டாய்
பெற்றவர் பெருமைப்படுகின்ற நான்கு பிள்ளைகளைப்
பெற்றே வாழ்வில் பெருமை பெற்ற தாயே!
அலை போன்ற குழலும் அழகான கையெழுத்தும்
விலை போட்டு வாங்க முடியாக் கல்வியும்
மற்றவர் வியக்கும் நற்பண்பும் அன்பும்
பூமாதேவியை மிஞ்சிய பொறுமையும் – தகப்பன்
குமாரனும் தாயவள் வள்ளியும் தந்த சீதனமோ - அன்றில்
ஒங்காரனோடு ஒன்றி வாழ்ந்ததில் உன்னிடம் வந்த குணமோ?
ஆதியில்ஆசிரியராய் பாதியில் அதிபராகி அளப்பெரும் பணிகள் செய்தவளே !மாணாக்கர் அறிவுக் கண்களைத் திறந்த்வளே !
எட்டுப் பேரக்குழந்தைகள் அன்பினில் திளைத்து , மட்டற்ற மகிழ்வோடு
கொட்டும் வான்மழையது பொழிந்து உன்னை வாழ்த்திடவே
வான் மழை போல நீயும் வையகத்தில் நீடு வாழி ! வாழி !