திரு திருமதி கோபாலசுந்தரம் அவர்களின் 50 ஆவது திருமண நாள் வாழ்த்துப்பா

நயினை மண் பெற்ற நல் முத்துக்கள் நமக்கெல்லாம் கிடைத்த சொத்துக்கள் நல்லறமாம் இல்லறம் கண்டு இன்று ஐந்து பத்துக்கள் நாம் அவர் வாழும் வழி வாழும் வித்துக்கள். பெற்றவரே வாழ்வில் பெருமை பெற்றவரே- உம்மைப் பெற்றவராய்ப் பெற நாம் பேறு பெற்றவரே கற்றவரே கற்றபடி வாழ்பவரே மற்றவர்கள் மதிக்க எம்மை வாழ வைத்தவரே உற்றவர்களோடு நாமும் ஒன்று சேர்ந்து – வாழ்வில் கொற்றவர் உம்மை கோடிகாலம் வாழ வாழ்த்துகிறோம். கடல் கடந்து சென்று கல்வியில் நாம் உயர உடல் வருத்தி உழைத்த தந்தை மடல் தந்த மகிழ்வில் எமை வளர்த்து நின்ற அன்னை தேடல் செய்தும் கிடைக்காத தெய்வீகப் பிறவிகளே. எழுபத்து இரண்டுவரை எமக்காக உழைத்தீர்கள் - அப்பா வழுவில்லாமல் எம்மை வாழ வைத்தீர்கள் - அம்மா. விழுகின்ற போதெல்லாம் எம்மை எழ வைத்தீர்கள் அழுகின்ற வேளையிலே அரவணைத்து நின்றீர்கள் உழுகின்ற காளைக்கும் நன்றி கூறும் பரம்பரை நாம் தொழுகின்ற தெய்வங்கள் உங்களுக்கு என்ன செய்வோம். வாழ்வு கொடுத்தவரே! உம்மை நாம் வாழும் வரை வாழ வைப்போம் வீழ விடமாட்டோம் விழுந்தாலும் எழவைப்போம் தோள் மீது சுமந்தவரே! உம்மை எம் மார்போடு நாம் அணைப்போம் எமக்காக வாழ்ந்தவரே! உமக்காக நாம் வாழ்வோம் பொன்மனம் கொண்ட எம் பொன் விழா நாயகர்கள் புன்னகையால் உலகை வென்று பூரித்து நிற்பவர்கள் - வெண் நிலவும் தன் ஒளியைத் தரணியிலே தரும் வரையில் தேன் தமிழின் இனிமையொடு பைந்தமிழின் இளமையோடு பாரினிலே நீடுவாழ்வீர் எண் இரண்டு பதினாறு பேறு பெற்றவர்கள் கண்ணை இமை காப்பதுபோல் காத்தெம்மை நிற்பவர்கள் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வு வாழ்பவர்கள் விண்ணிலுள்ள மீன் அளவு மண்ணில் பல காலம் வாழ்க. பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்