அன்னைக்குச் சமர்ப்பணம்

அன்புக்கு அர்த்தம் சொல்லி - நல்
   அறத்துக்கே வாழ்ந்து காட்டி
பண்புக்குப் பாடம் புகட்டி - ஆசிரியப்
   பணிக்காக உன்னை வாட்டி
மண்ணுக்குள் நீ மறைந்த
   மாயத்தை என்னவென்பேன் 
சீரியத் தொழிலாம் ஆசிரியத் தொழிலைச்

   சிறப்புடனே செய்தவள் நீ -உன்னில்

சிரிப்பைத் தான் நான் கண்டேன்

   சினத்தை என்றுமே பார்த்ததில்லை

அன்புக்கும் நீ தானம்மா

   அறிவுக்கும் நீ தானம்மா

பண்புக்கும் உன்னைத் தவிர

   பாரினில் யாரையும் பார்த்ததில்லை

உணர்வுகளைப் பகிரும் வேளை நீ தோழி

   உடலில் சற்று நோய் என்றால் நீ தாதி

உள்ளத்தில் அமைதி தேடுகையில் நீ உபதேசி

   உன்னையே நீ வருத்தியதால் நீ தியாகி

முருகா என்று மும்முறை உன் வாழ்வு

   முடியும் போதும் கூறியதால்

முனிவர் அடையும் பெரும் பேற்றை

   முருகன் உனக்குத் தந்திருப்பான்

 

ஆக்கியவர்: நயினை நங்கை


Author

நயினை நங்கை

Other blogs

Written by: கங்கைமகன்
Written by: கங்கைமகன்
Written by: கங்கைமகன்
Written by: சிவ மேனகை
Written by: கங்கைமகன்
Written by: சிவ மேனகை
Written by: சின்னத்தம்பி குமாரசாமி